Sunday, September 29, 2013

மோடிக்கு வரும் கூட்டத்தால் எந்த மாற்றமும் வராது -திருமாவளவன் - www.tnfinds.com - Best site in the world

மோடிக்கு வரும் கூட்டத்தால் எந்த மாற்றமும் வராது -திருமாவளவன்
திண்டுக்கல்: திருச்சியில் நரேந்திர மோடிக்கு வந்த கூட்டத்தை வைத்து தமிழக அரசியலிலோ, லோக்சபா தேர்தலிலோ எந்த மாற்றமும் வந்து விடும் என்று கூற முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து வத்தலகுண்டு வந்த அவர் அங்கு மாலைமலருக்கு அளித்த பேட்டியில், லோக்சபா உறுப்பினர்கள் கூடி பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைதான் இதுவரை வழக்கத்தில் இருந்து உள்ளது.
 
 பாரதீய ஜனதா தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவித்து உள்ளது மரபை மீறிய செயல். தற்போது திருச்சியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கூடிய கூட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கும், மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் ஆகும். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம் பெறலாம். 
 
கொள்கை உடன்பாடு உள்ள கட்சிகள் மட்டுமே ஒரே கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று நினைக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றாலும் அந்த கூட்டணியில் நாங்கள் இருப்போம். அதற்காக கொள்கைகளை விட்டு கொடுக்க மாட்டோம். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி பறிப்பில் இருந்து காப்பாற்றும் மத்திய அரசின் அவசர சட்டத்தினை வரவேற்கிறோம். ஏனெனில் தலித், பழங்குடியின சமூகத்தினர் மீதுதான் 90 சதவீதம் பொய் வழக்குகள் தொடரப்படுகின்றன. 
 
அதனால் அவசர சட்டம் கொண்டு வராமல் இருந்தால் இந்த வழக்குகளை காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை பதவிக்கு வரவிடாமல் செய்து விடுவர். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. தர்மபுரி இளவரசன்- திவ்யா காதல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என்றார் திருமாவளவன்.

No comments: