பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை தாக்கிய நபர் தமிழகத்தில் ஊடுருவல்?
பெங்களூர்: ஏ.டி.எம். மையத்தில் 38 வயது பெண் வங்கி அதிகாரியை தாக்கிய நபர் தமிழகம் நோக்கி சென்றிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
பெங்களூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் மேலாளராக இருக்கும் ஜோதி உதய்குமார்(38) நேற்று முன்தினம் காலை மாநகராட்சி அலுவலகம் அருகே இருக்கும் எல்.ஐ.சி. கட்டிடத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். காவலாளி இல்லாத அந்த ஏ.டி.எம். மையத்தில் அவர் பணம் எடுத்ததும் மர்ம நபர் உள்ளே புகுந்து அவரை துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். மேலும் அவரின் தலையில் அரிவாளால் பல முறை தாக்கிவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த ஜோதி கெங்கேரியில் உள்ள பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். அந்த நபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா ஹெச். ஆவ்ராத்கர் மற்றும் கூடுதல் கமிஷனர் பிரனாப் மொஹந்தி ஆகியோர் நேற்று ஜோதியை மருத்துவமனையில் சந்தித்து குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்படுவான் என்று அவரிடம் உறுதி அளித்தனர். அந்த நபர் அவரை திரும்பத் திரும்ப தலையில் தாக்கியதில் ஜோதியின் வலது பக்க உடல் செயல் இழந்துவிட்டது.
அந்த மர்ம நபர் தமிழகம் நோக்கி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் காவலாளி இல்லாத அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் உடனே காவலாளியை பணியமர்த்த வேண்டும் இல்லை என்றால் ஒருவரை நியமிக்கும் வரை மையங்களை மூட வேண்டும் என்று கர்நாடக அரசு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment