திருமணம் செய்வதாகக் கூறி செக்ஸ் அனுபவித்தார்- தொழிலதிபர் மீது நடிகை ராதா புகார்
திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, செக்ஸ் அனுபவித்துவிட்டு இப்போது
வைப்பாட்டியாக மட்டும் வைத்துக் கொள்வேன் என்று ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர்
மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதா.
மேலும்
ரூ.50 லட்சம் நகை-பணத்தை சுருட்டிச்சென்று விட்டார் என்றும், அவர் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராதா. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சென்னை சாலிகிராமம், லோகய்யா தெருவில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர், நிருபர்களைச் சந்தித்து கூறியதாவது:
எனது பூர்வீகம் ஆந்திர மாநிலம் நெல்லூர். ஆனால், சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். பிளஸ்-2 வரை படித்திருக்கிறேன். சினிமாவில் பிரபலமாகி நன்றாக பணம் சம்பாதித்துள்ளேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள் என்பதால் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டேன்.
ஓரளவு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே, திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்று வாழ ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் என்னை பெரும் புயலில் சிக்க வைத்து, எனது வாழ்க்கையை இப்போது நாசமாக்கிவிட்டது.
ஏவி.எம். ஸ்டூடியோவில் வைத்து, அந்த பட அதிபர் மூலம், மலேசிய தொழில் அதிபர் என்ற நாமத்துடன் பைசூல் என்ற ஷியாம் என்பவர் என்னை நேரில் சந்தித்தார். என்னை கதாநாயகியாக நடிக்க வைத்து ஒரு படம் தயாரிப்பதாக சொன்னார். ரூ.10 ஆயிரம் பணத்தை அட்வான்சாக கொடுத்தார்.
அதன்பிறகு பட தயாரிப்பு தொடர்பாக அவரும், நானும் அடிக்கடி சந்தித்து பேசினோம். அடுத்த 20 நாட்களில் பைசூல் என்னை நேசிப்பதாக சொன்னார். திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே இல்லற வாழ்க்கையை விரும்பிய என்னை அவரது காதல் பொங்கிய அழைப்பு சிந்திக்க வைத்தது. அவரது காதலை ஏற்றுக்கொண்டேன். நாளடைவில் என்னை சட்டபூர்வமாக மணந்து கொள்ளாமலேயே, என்னோடு உல்லாசம் அனுபவித்தார். பைசூலும், நானும் கணவன்-மனைவி போலவே ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அவருக்கு நானே சமைத்துப் போட்டேன். சினிமாவில் நடிப்பதையும் விட்டுவிட்டேன்.
அவருடன் நடத்திய இல்லற வாழ்க்கையின் பலனாக, நான் கர்ப்பம் ஆனேன். ஆனால், அவர் சொன்னதால் கருவை கலைத்துவிட்டேன். கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் கணவன்-மனைவியாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்தோம்.
என்னை வெளிப்படையாக பைசூல் மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனது தந்தை-தாய் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று முதலில் சொன்னார். இப்போது அவரது தாய்-தந்தை இறந்துவிட்டார்கள். அதற்கு பிறகும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.
'நடிகையை திருமணம் செய்ய முடியாது, வைப்பாட்டியாகத்தான் வைத்துக்கொள்ள முடியும்' என்று என்னை இப்போது கிண்டலாக பேசுகிறார். அவரோடு இனி வாழ முடியாது என்று முடிவு செய்து, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர் என்னை அனுபவித்துவிட்டு, தூக்கி எறிந்துவிட்டார். செக்ஸ் சுகத்துக்கும், பணத்துக்கும் மட்டும் என்னை பயன்படுத்தினார்.
பைசூல் வைர நகை செய்யும் தொழிலும் செய்வதாகச் சொன்னார். அந்த தொழிலுக்கு தேவைப்படுவதாக சொல்லி எனது நகைகளையும், ரொக்கப் பணமாக ரூ.50 லட்சம் வரையும் என்னிடம் இருந்து சுருட்டினார். அந்த பணத்தைத் திருப்பித் தரவும் மறுத்துவிட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் அடுக்குமாடி சொந்த வீட்டில் வாழ்கிறார். அவரது சொந்த ஊர் சிவகங்கை அருகே உள்ள இளையான்குடி, புதூர் ஆகும். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி இருப்பதாக அறிகிறேன்.
பணத்துக்கும், போகத்துக்கும் என்னைப்போல வேறு நடிகையையோ, வேறு பெண்ணையோ அவர் ஏமாற்றி விடக்கூடாது. அவரது வேடத்தை கலைத்து, சட்டப்படி அவருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்காகவே, இந்த புகார் மனுவை கொடுத்துள்ளேன்," என்றார்.
அவரது புகார் மனு விசாரணைக்காக தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment