Monday, December 23, 2013

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு! விற்பனை விலை உயராது - www.tnfinds.com - Best site in the world...


பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு! விற்பனை விலை உயராது

சென்னை: பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் நுகர்வோர்களுக்கு பால் விற்பனை விலை உயர்த்தப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கூறப்பட்டுள்ளதாவது:

" தமிழக அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கையினைப் பரிசீலிக்கும் பொருட்டு, இன்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பின், பசுந் தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, பணியாளர்களின் சம்பளம், கறவை மாடுகளின் விலை மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டும்; அண்டை மாநில கூட்டுறவு பால் சங்கங்களும், தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விலையையும், பால் கொள்முதல் விலையையும் உயர்த்தியுள்ளதைக் கருத்தில் கொண்டும்; பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டும்; பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர நான் உத்தரவிட்டுள்ளேன்.

 இதன்படி, பசும் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாயாகவும், எருமைப் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.1.2014 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

 இந்த பால் கொள்முதல் உயர்வினையடுத்து, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 20 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 31 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதன் பயனாக தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பின் கீழ் உள்ள சுமார் 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். இந்தக் கொள்முதல் விலை உயர்வால் ஓர் ஆண்டிற்கு 273 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.

 கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு, பால் விற்பனை விலை உயர்த்தப்படமாட்டாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.








No comments: