நடுரோட்டில் பெண் வெட்டிக்கொலை: வாலிபர் வாக்குமூலம்
நேற்று புதுவையில் மாலை வேளையில் வேலைக்குச் சென்று திரும்பிய பெண்ணை நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவத்தில் பிடிபட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபாகரன், தனியார் நிறுவன டிரைவர். இவரது மனைவி சத்தியபிரியா (வயது 33). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சத்தியபிரியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது குழந்தைகளுடன் சேர்ந்து வசித்து வந்தார்.
குடும்ப செலவுக்காக அவர், புதுவை முதலியார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலையில் வேலை முடிந்து சத்யபிரியா ஸ்கூட்டரில் வீடு நோக்கி திரும்பினார். சிறிது தூரம் சென்றபோது ஒரு வாலிபர் அந்த இருசக்கர வாகனத்தை வழி மறித்தார். மறுகணமே அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடுரோட்டில் சத்திய பிரியாவை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
அதனை கண்டு திடுக்கிட்ட அந்த பகுதி மக்கள் சுதாரித்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த வாலிபர் முருங்கப்பாக்கம்பேட் பகுதியை சேர்ந்த அமலநாதன் (28) என்பதும், வெல்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
சத்தியபிரியாவை கொலை செய்ததை அமல நாதன் ஒப்புக்கொண்டார். கொலைக்கான காரணம் என்ன? என போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
சத்தியபிரியா வேலை செய்து வந்த தனியார் நிறுவனத்துக்கு ஒருமுறை நான் சென்றேன். அப்போது எனக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். என்னிடம் சத்யபிரியா ரூ. 13 ஆயிரம் கடனாக வாங்கினார். அதன் பிறகும் அவர் வீட்டுக்கு வழக்கம்போல் சென்று வந்தேன்.
ஆனால் திடீரென அவர் என்னிடம் ‘நீங்கள் எனது வீட்டுக்கு வர வேண்டாம்’ என கூறி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நான், கடனாக கொடுத்த 13 ஆயிரம் ரூபாயை கேட்டேன். அந்த பணத்தை மீண்டும் கேட்டு வற்புறுத்தினால் போலீசிடம் புகார் செய்வேன் என்றும் கூறி மிரட்டினார். அதனை கேட்டு விரக்தியடைந்த நான் கடந்த 2 மாதத்துக்கு முன்பு விஷம் குடித்தேன். 1 மாதம் சிகிச்சை பெற்ற பிறகு குணமடைந்தேன்.
அதன் பிறகும் நான் கொடுத்த கடனை சத்தியபிரியாவிடம் கேட்டேன். உடனே நான் தொடர்ந்து மிரட்டி வருவதாக முதலியார் பேட்டை போலீசில் அவர் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் சத்தியபிரியாவை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.
அதன்படி கொலை திட்டத்துடன் நேற்று மாலையில் சத்யபிரியா வேலை செய்யும் பகுதியில் உள்ள ஒரு மதுகடையில் மது குடித்தேன். பிறகு அந்த பெண்ணின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தேன். சிறிது நேரத்தில் சத்தியபிரியா இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றேன்.
No comments:
Post a Comment