மோடி குறித்து தேவையில்லாமல் பீதி கிளப்புகிறது காங்.- ஜமாத் இ உலமா குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர்: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து
பீதியைக் கிளப்பி தனக்கு முஸ்லீம்களின் வாக்குகளைத் திருப்பும் வேலையில்
காங்கிரஸ் ஈடுபடுவதாகவும், இது தேவையற்றது என்றும், முஸ்லீம்களை
தேவையில்லாமல் இப்படி அச்சுறுத்தக் கூடாது என்றும் ஜமாத் இ உலமா இந்த் என்ற
அமைப்பின் தலைவரான சையத் மஹமூத் மதானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஜெய்ப்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு
பேசுகையில், மோடியை வைத்து முஸ்லீம் வாக்குகளை தனக்கு சாதகமாக திருப்பும்
வேலையில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. இது தவறானது. 2014 லோக்சபா தேர்தலை மனதில்
கொண்டு இவ்வாறு காங்கிரஸ் செயல்படுகிறது.
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதற்காக முஸ்லீம்கள் அச்சப்படத்
தேவையில்லை. இதற்காக பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நமது நாட்டில்
மதச்சார்பின்மை நன்கு ஆழமாக ஊடுறுவியுள்ளது. இதை எந்த ஒரு மதவாத சக்தியும்
மக்களின் மனதிலிருந்து அகற்றி விட முடியாது.
முஸ்லீம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெறலாம்
என்று காங்கிரஸ் முயல்கிறது. இதை அக்கட்சி நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால்
அக்கட்சிக்கு அது வருகிற நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் பெரும்
பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்கான திட்டங்களில் காங்கிரஸ் கவனம் செலுத்த
வேண்டும். உண்மையாக கவனம் செலுத்த வேண்டும். இதுவரை அப்படி எதையுமேஅந்தக்
கட்சி இஸ்லாமியர்களுக்காக செய்யவில்லை.
ராஜஸ்தானில் காங்கிரஸும், உ.பியில் சமாஜ்வாடியும் முஸ்லீம் சமுதாயத்தினரைக்
காக்கத் தவறி விட்டன. உ.பியின் முசாபர்நகரிலும், ராஜஸ்தானின் கோபால்கஞ்ச்
பகுதியிலும் முஸ்லீம்கள் பெரும் தாக்குதல் மற்றும் சோதனைக்கு ஆளானபோது
அவர்களைக் காக்க இரு மாநில அரசுகளுமே தவறி விட்டன. மதவாத சக்திகளைக்
கட்டுப்படுத்த, ஒடுக்கத் தவறி விட்டன என்றார் அவர்.
No comments:
Post a Comment