அதிமுகவுடன் காங். கூட்டணி? ஜெ- ப.சிதம்பரம் தொலைபேசியில் பேச்சு
சென்னை: பாரதிய ஜனதா அல்லது 3வது அணியை தமிழக முதல்வர் ஜெயலலிதா
ஆதரிப்பார் என்று கூறப்படும் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியோ அதிமுகவுடன்
கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்று
எதிர்பார்க்கப்பட்டாலும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதை விரும்பவில்லை என்று
கூறப்படுகிறது. தேர்தல் களத்தில் திமுகவினர் காலைவாரிவிடவே வாய்ப்பு
இருக்கிறது என்பது காங்கிரசாரின் கருத்து.
இதைத்தான் அதிமுக ஆதரவு காங்கிரசார் பலரும் மேலிடத்துக்கும் தெரிவித்து
வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக தரப்பிலும் ஜெயலலிதா மீதான பெங்களூர்
சொத்துக் குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க காங்கிரஸ் மேலிடத்தை
தொடர்பு கொள்ளும் படலங்களும் அரங்கேறி இருக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் மார்க்ரெட் ஆல்வா மூலமாக இத்தொடர்புகள்
மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.
அதிமுகவின் எதிரியாக கருதப்படும் ப.சிதம்பரம்தான் இப்போது அதிமுகவுடன்
கூட்டணி அமைக்க மும்முரம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. சிவகங்கை
தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் ஜெயிக்க திமுகவின் தயவை விட ஆளும் அதிமுக
தயவு அவசியம் என்று பெரும்பான்மையான கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர்.
இதனை அப்படியே மேலிடத்துக்கும் தெரிவித்திருக்கிறார் ப.சிதம்பரம்
ப.சிதம்பரத்தின் பரிந்துரையில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர்
ரோசய்யா. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் இணக்கமான போக்கை கொண்டிருப்பவர்
ரோசய்யா. எதிரிகளாக இருக்கும் ப.சிதம்பரத்தையும் ஜெயலலிதாவையும் ரோசய்யா
தமது பர்சனல் போனில் பேசவைத்தார் என்றும் கோட்டை வட்டார தகவல்கள்
பரபரக்கின்றன.
இருப்பினும் அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தலுக்குப் பின்னர்தான்
காங்கிரஸ் ஆட்சி அமைக்க உறுதியாக இருப்போம் என்பது கூறப்பட்டிருக்கிறது.
அதாவது பாரதிய ஜனதா, 3வது அணி அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு
இருக்கிறது என்பதைப் பொறுத்து தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம்
என்பது அதிமுகவின் கணக்கு.
ஆனால் ஜெயலலிதா இப்படியெல்லாம் செய்யக் கூடியவர் என்பதால்
தேர்தலின்போதே கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதில் கறாராக இருக்கிறது
காங்கிரஸ். பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்க நெருங்க..
லோக்சபா தேர்தலும் நெருங்க நெருங்க.. அதிமுக- காங்கிரஸ் உறவும்
நெருக்கமாகிவிடும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
No comments:
Post a Comment