நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் 12 கோடி புதிய வாக்காளர்கள்!
டெல்லி: 2014ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் சுமார் 12 கோடி
பேர் முதன்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
18 வயதை நிறைவு செய்தவர்கள் தற்போது புதிதாக வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கி தற்போது
வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி நாடு முழுவதும் 79 கோடி
வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 12 கோடிபேர் முதன் முறையாக வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளவர்களாவர்.
2009ம் ஆண்டு தேர்தலில் எந்த ஒரு தனிக் கடசியும் 12 கோடிக்கும் அதிகமாக
ஓட்டுக்கள் பெற்றதில்லை. எனவே இந்த புதிய 12 கோடி வாக்காளர்கள் வரும்
தேர்தலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி உத்தர
பிரதேசத்தில் 2.3 கோடி இளைஞர்கள் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில்
முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 1.05 கோடி வாக்காளர்களும், பீகாரில் 94.3 லட்சம்
வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளர்களும் புதிதாக
வாக்களிக்க உள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை ஆந்திராவில் 80 லட்சத்திற்கும்
அதிகமான இளைஞர்களும், தமிழகத்தில் 62 லட்சம் இளைஞர்களும், முதன் முறையாக
வாக்களிக்க உள்ளனர்.
கர்நாடகாவில் 58 லட்சம் இளைஞர்களும், கேரளாவில் 26 லட்சம் இளைஞர்களும் வாக்களிக்க உள்ளனர்.
டிசம்பரில் டில்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 16.6 லட்சம்
இளைஞர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளனர். ராஜஸ்தானில் 72.9 லட்சம் பேரும்,
மத்திய பிரதேசத்தில் 74 லட்சம் பேரும், இமாச்சல பிரதேசம் போன்ற சிறிய
மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 10 லட்சம் பேர் வாக்களிக்க
உள்ளனர்.
இது சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள்தொகை விபரத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள வயது அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகும்.
இளைஞர்கள் வேலைதேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து நிலை அதிகரித்து
வருவதால் மாநிலங்களுக்கிடையேயான புதிய வாக்களிக்கும் இளைஞர்களின் விபரம்
குறைய வாய்ப்பு உள்ளது.
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உத்தரபிரதேசம்
மற்றும் பீகாரில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ளதால் அங்கு புதிதாக
வாக்களிக்கும் தகுதி பெறம் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளதாக
சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி
தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 11.9 கோடி ஓட்டுக்களும்,
பா.ஜ.,விற்கு 7.8 கோடி ஓட்டுக்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2.6 கோடி
ஓட்டுக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2.2 கோடி ஓட்டுக்களும்
பதிவாகி இருந்தன. இக்கட்சிகள் தவிர நாட்டின் வேற எந்த கட்சியும் கோடிகளில்
ஓட்டுக்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வாக்காளர் பெயர்களை இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறையை
முதன்முறையாக பயன்படுத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். தேர்தலில் தவறாமல் வாக்களிப்பது குறித்து
விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்த பல்கலைக்கழங்கள் மற்றும்
கல்லூரிகளில் சிறப்பு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிரவீண்குமார்
தெரிவித்துள்ளார்.
இதுவரை இருந்த வாக்காளர்கள் ஏதாவது ஒரு கட்சியின் மீதோ, தலைவரின் மீதோ
ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதனடிப்படியில் வாக்களிப்பார்கள்.
ஆனால் புதிதாக வந்துள்ள 12 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குதான்
நாட்டின் அடுத்த தலைமையை நிர்ணயிக்கப்போகின்றனர் என்று கூறியுள்ளனர்
அரசியல் நோக்கர்கள்.
More News Click here.........
More News Click here.........
No comments:
Post a Comment