Wednesday, January 8, 2014

ஜன. 19 முதல் டீலர்கள் ஸ்டிரைக்... காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரும் அபாயம் - www.tnfinds.com - Best site in the world....


ஜன. 19 முதல் டீலர்கள் ஸ்டிரைக்... காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரும் அபாயம்


டெல்லி: எண்ணெய் நிறுவனங்களின் கடுமையான விதிமுறைகளை தளர்த்தக்கோரியும், கெடுபிடிகளை கண்டித்தும் வருகிற 19-ந் தேதி முதல் போராட்டம் நடத்த இந்திய சமையல் காஸ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். வரும் சிலிண்டர் சப்ளையை நிறுத்த உள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர். 

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கழகம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை எல்.பி.ஜி சிலிண்டர்களை தயாரித்து நுகர்வோர்கள் பயன்பாட்டுக்காக வழங்குகின்றன. 

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இந்த கேஸ் சிலிண்டர்களை பெற்று வீடுகளுக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் ‘சப்ளை' செய்வதற்காக சுமார் 12 ஆயிரத்து 600 வினியோகஸ்தர்கள் (டீலர்கள்) இருக்கிறார்கள். வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. 

ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை அதிக விலை கொடுத்து சந்தை விலையில்தான் வாங்க வேண்டும். ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்துவதற்காக 19 கிலோ எடையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

 இந்த வர்த்தக சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது. இவற்றின் விலை அதிகம் என்பதால், வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சிலிண்டர்களை வினியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடன் சில ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. 

இதைத்தொடர்ந்து, வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க எண்ணெய் நிறுவனங்களில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டு அறிய அவ்வப்போது அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். 

அப்படி வீடுகளுக்கான சிலிண்டர்கள் உபயோகப்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டல், டீக்கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சில சமயங்களில் சிறைத்தண்டனையும் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட சமையல் கேஸ் வினியோகஸ்தருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, சில சமயங்களில் வினியோக உரிமையும் ரத்து செய்யப்படுவது உண்டு.

மேலும் கள்ளச்சந்தையில் வீடுகளுக் கான சிலிண்டர் விற்கப்படுவதை தடுக்க கடுமையான விதிமுறைகளையும் எண்ணெய் நிறு வனங்கள் வகுத்துள்ளன.

விநியோகஸ்தர்கள் புகார்.

இதற்கிடையே, கிராமப்புறங்களில் வர்த்தக சிலிண்டர்களின் தேவை குறைவாக இருந்த போதிலும் அவற்றை அதிக அளவில் விற்பனை செய்யுமாறு தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக வினியோகஸ்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

அத்துடன், எண்ணெய் நிறுவனங்களில் இருந்து தங்களுக்கு அனுப்பப்படும் சிலிண்டர்களில் சில எடை குறைவாக இருப்பதாகவும், சில சமயங்களில் காலாவதியான சிலிண்டர்கள் வந்து விடுவதாகவும் அவர்கள் குறை கூறுகிறார்கள். 

இந்த குறைகளை நிவர்த்தி செய்யக் கோரியும், கடுமையான விதிமுறைகளை தளர்த்தக்கோரியும், எண்ணெய் நிறுவனங்களின் கெடுபிடிகளை கண்டித்தும் வருகிற 19-ந் தேதி முதல் ஒத்துழையாமை போராட்டம் நடத்த இந்திய சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி இதன் பொது செயலாளர் பவன்சோனி கூறியதாவது:

ஜனவரி 15ம் தேதி முதல் வர்த்தக சிலிண்டர் விற்பனையை நிறுத்துவோம். வீடுகளுக்கான சிலிண்டர் சப்ளையும் நிறுத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் எங்களது குடோனுக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம். 

எங்கள் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் ஜனவரி 19ம் தேதி முதல் அனைத்து சிலிண்டர் விற்பனையையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தி விடுவோம் என்றார்.

 இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சமையல் கேஸ் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் நுகர்வோர் கலக்கமடைந்துள்ளனர்.









No comments: