சொல்கிறார்கள்
ஒவ்வொரு குடிமகனும் ராஜாக்களே!
சேவை பெறும் உரிமை சட்டத்தின் அவசியத்தை கூறும், அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர், ஆர்.முத்துசுந்தரம்: தகவல் அறியும் உரிமை சட்டத்தை போல், சேவை பெறும் உரிமை சட்டமும், வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அரசு தரும் அத்தியாவசிய சேவைகளான ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை வழங்குதல் போன்றவற்றில், காலதாமதம் ஏற்பட்டால், அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டம், 16 மாநிலங்களில் அமலில் உள்ளது.குடிமக்களின் குறைதீர்ப்பு மசோதா, பார்லிமென்டில் நிறைவேறினால், அனைத்து மாநிலங்களும் இச்சட்டத்தை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், இம்மசோதா பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை.தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிய பின், இச்சட்டத்தை கொண்டு வந்தால், உண்மையிலேயே நல்ல பலனை தரும். ஏனெனில், இச்சட்டம் கொண்டு வரப்பட்டால், குடும்ப அட்டைக்கு, 15 நாள்; ஜாதி சான்றிதழுக்கு ஒரு வாரம் என, சேவைக்கு ஏற்ப, கால நிர்ணயம் செய்யப்படும்.ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு, விண்ணப்பதாரரின் ஊருக்கே சென்று விசாரணை மேற்கொள்வது உட்பட, பல நடைமுறை விஷயங்கள் உள்ளன. ஆனால், ஜாதி சான்றிதழ் வழங்க, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரேயொரு குமாஸ்தா தான் இருப்பார்.இப்படி இருந்தால், எப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்க முடியும்? தமிழக அரசு துறைகளில் அனுமதிக்கப்பட்ட, 2 லட்ச பணியிடங்கள் காலியாக உள்ளன.மேலும், புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்கும், புதிய பணியிடங்களை அறிவிப்பதில்லை. இப்படியாக, அரசு தன் கடமைகளை கைகழுவி வருகிறது. இது போன்ற யதார்த்தங்களை மூடி மறைத்து, சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படுமானால், அது, மக்களை ஏமாற்றும் செயலே.அரசு ஆவணங்களை முழுமையாக, 'டிஜிட்டலைஸ்' செய்வது, ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பணிச்சுமை சார்ந்த அளவீடுகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை, முதலில் சரி செய்வது நல்லது. அதன் பின், இச்சட்டம் கொண்டு வரப்படுமானால், ராஜாக்களாக ஒவ்வொரு குடிமகனும், மக்கள் சேவகர்களாக அரசு ஊழியர்களும் மாறும் நிலை வரும்.
No comments:
Post a Comment