அக்கம் பக்கம்
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., கட்சி தலைவருமான, மம்தா பானர்ஜியை பார்த்தால், சமீப காலமாக, அவர் அமைச்சர்கள், பீதியடைகின்றனர். தங்கள், இலாகா தொடர்பான வேலைகளை சரியாக பார்க்கவில்லை என, முதல்வர், 'டோஸ்' விடுவாரே என்ற கவலை எல்லாம், அவர்களுக்கு இல்லை. முதல்வர் கொடுக்கும், திடீர், 'அசைன்மென்டு'களால் ஏற்படும் பீதி தான், அதற்கு காரணம்.சமீபத்தில், ஹவுராவின் அடுக்கு மாடி கட்டடத்தின், 11வது மாடியில் உள்ள, தன் அலுவலகத்தில் இருந்து, ஜன்னல் வழியாக, இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார், மம்தா.அப்போது, தூரத்தில் ஒரு இடத்தில், புகை வருவதை பார்த்து, பதற்றமடைந்த மம்தா, அருகில் இருந்த, தன் அமைச்சர்கள் சிலரிடம், 'தூரத்தில், எங்கோ ஒரு கட்டடத்தில், தீ எரிகிறது. அந்த இடத்தை கண்டறிந்து, உடனடியாக, தீயை அணைக்க நடவடிக்கை எடுங்கள்... குயிக்' என, உத்தரவிட்டார்.அமைச்சர்களும், ஆளுக்கொரு திசையில், தலை தெறிக்க ஓடி, தீ எரியும் இடத்தை தேடினர். நீண்ட நேரமாக தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம் தான், தூரத்தில், சிறுவர்கள் சிலர், டயர்களை எரித்ததும், அதில் இருந்து வந்த புகையை பார்த்து, தீ விபத்து ஏற்பட்டதாக, மம்தா, பீதியை கிளப்பியதும், அமைச்சர்களுக்கு தெரிந்தது.நொந்து போன அமைச்சர்கள், நீண்ட நேரமாக ஓடியதால், நா வறண்டு, கண்கள் பிதுங்கி, மூச்சு வாங்கியபடி, ஒரு ஓரத்தில் அமர்ந்தனர். 'இங்கே, அமைச்சராக இருப்பதை விட, கேரளாவுக்கு அடிமாடாக போயிருக்கலாம்பா...' என, புலம்பியபடியே, தண்ணீர் பாட்டில்களை வாங்கி, தாகத்தை தணித்தனர்.
No comments:
Post a Comment