Thursday, January 9, 2014

தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு - www.tnfinds.com - Best site in the world...


தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: தனியார் செவிலியர் கல்லூரியில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை வழங்கும் விதமாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்திலிங்கம் உள்பட சிலர் தாக்கல் செய்திருந்த மனுவில், 18.1.12 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், தனியார் நிறுவனத்தில் நர்சிங் படிப்பவர்களுக்கும், அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கும், இணையாக தேர்வு நடத்தப்படும்.

 அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி நியமனத்துக்காக இந்த இருதரப்பினரும் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிகளுக்கு, அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டும்தான் நியமிக்கப்பட்டு வந்தனர். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். 

இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து, அரசாணையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் ஊரக மருத்துவ சேவைகள் இயக்குனர் உள் பட பலர் மேல்முறையீடு செய்தனர். 

இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து புதனன்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: "இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களை அரசு மருத்துவமனை டாக்டர்களாக நியமிக்கப்படுகின்றனர். 

அதுபோல, அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி வழங்க அரசு முடிவு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது என்று வாதம் செய்தார். மேலும், அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு, பொது தேர்வு நடத்தி அதில் தகுதியின் அடிப்படையிலேயே அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலை வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

 இவ்வாறு அரசு பணியில் செவிலியர்கள் நியமிக்கப்படுவதால், அவர்களின் சேவைகளை அந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகள் பெற்று பயனடைகின்றனர். எனவே தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி வழங்கப்படும் என்ற அரசாணை செல்லும். 

இந்த அரசாணையை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று தீர்ப்பளித்துள்ளனர்.



No comments: