பக்க வாத்தியம்
'குட்டு' வைத்து பேசிய டி.எஸ்.பி.,அசடு வழிந்த அமைப்பாளர்கள்!
விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில், மாநில கூடைப்பந்து போட்டிகள், துவக்க விழா நடந்தது.துவக்க விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் கலந்து கொள்வதாக, அழைப்பிதழில் குறிப்பிடப் பட்டிருந்தது. போட்டியைத் துவக்கி வைக்க அழைக்கப்பட்ட, டவுன் டி.எஸ்.பி., சங்கர், மதியம், 3:00 மணிக்கு, விளையாட்டு மைதானத்திற்கு வந்து சேர்ந்தார்.அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்களும், மைதானத்திற்கு வரவில்லை.கிளம்பிய, டி.எஸ்.பி.,யிடம், சிறிது நேரம் இருக்குமாறு, போட்டி அமைப்பாளர்கள் கெஞ்சினர்; ஆனால், அவர் கிளம்பி விட்டார்.வி.ஐ.பி.,க்கள் இருவரும், வெளியூரில் இருப்பதாக தகவல் வரவே, அவசர அவசரமாக, விளையாட்டு வீரர்கள், மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு, டி.எஸ்.பி.,க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.கோபத்துடன், திரும்ப வந்த, டி.எஸ்.பி., சங்கர் பேசுகையில், 'நேரம் தவறாமை, விளையாட்டு வீரர்களுக்கு மிக முக்கியம்; அவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இது பொருந்தும்' என, ஒரு, 'போடு' போட்டார்.இதைக் கேட்டு நெளிந்த போட்டி அமைப்பாளர்கள், அசடு வழிந்தபடி, அவரை வழியனுப்பி வைத்தனர்.
ஜெயலலிதா உத்தரவைபின்பற்றும் தி.மு.க.,!
சென்னை, மாதவரத்தில், கடந்த, 3ம் தேதி, திருச்சி மாநாடு தொடர்பான, திருவள்ளூர் மாவட்ட, தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் பேசியபோது, 'திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில், 7 கோடி ரூபாய் வரை நிதி கொடுத்துள்ளோம். மூன்றாவது இறுதிக் கட்ட, தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம், 10ம் தேதி, திருவொற்றியூரில் நடக்கிறது. இன்னும் பணம் கொடுக்காதவர்கள், தயவு செய்து, உடனே கொடுத்து விடுங்கள். அதன் பிறகு பணத்தைப் பற்றி பேச மாட்டேன். அதே போன்று விளம்பர பேனர்களில், தலைவர், தளபதியின் படங்களை மட்டும் போடுங்கள். என் படம் கூட போடக் கூடாது; பெயரை மட்டும் போடுங்கள் போதும்' என்றார்.கூட்டத்தில் இருந்த தொண்டர், 'அட, என்னப்பா இது... அந்தம்மா (ஜெயலலிதா) போட்ட உத்தரவை, நம்ம கட்சியில் செயல்படுத்த சொல்றாரு. இவரு நம்ம கட்சியா, அவங்க கட்சியா? செலவு செய்து பேனர் வச்சா, படத்தை போடக் கூடாதுன்னா எப்படி? பேனர்ல நம்ம படத்தை போட்டாத்தான், ஊர்ல நாலு பேருக்கு தெரியும்' என்றதும், அருகில் இருந்தவர்கள் பலமாக சிரித்தனர்.
No comments:
Post a Comment