Saturday, January 11, 2014

டீ கடை பெஞ்சு - www.tnfinds.com- Best site in the world...

டீ கடை பெஞ்சு

வருத்தத்தில் 'வருவாய்' துறையினர்!

''மதுரையில, போஸ்டர் கலாசாரம், என்னைக்கு தான் ஓயப் போகுதோ தெரியலை பா...'' என்ற அன்வர்பாய், வடையை எடுத்து கடித்தபடி, பெஞ்சில் வந்தமர்ந்தார்.
''எந்தக் கட்சியை சொல்றீங்க... 'யாரை' சொல்றீங்க... கொஞ்சம் விவரமா தான் சொல்லுங்க...'' என, ஆர்வமாய் கேட்டார், அந்தோணிசாமி.

''இது கட்சிக்காரங்க மேட்டர் இல்லை பா... மதுரை காமராஜ் பல்கலையிலும், கட்சிக்காரங்க மாதிரியே, போஸ்டர் கலாசாரம், தொற்றியிருக்கு... இப்போதைக்கு, இந்த விஷயம் தான், மதுரையில, சுவாரசியமா பேசப்படுது...

''துணைவேந்தரை பாராட்டி, 'தாயே... பெண்ணரசியே... அம்மாவே...' அப்படின்னு, அரசியல்வாதியை துதி பாடும், 'ரேஞ்சு'க்கு, பல்கலையை சுற்றியுள்ள சுவர்களில், அடிக்கடி போஸ்டர்கள் மின்னுது பா...

''இதெல்லாம், துணைவேந்தருக்கு தெரியாமலா நடக்கும் வே...'' என, பெரியசாமி அண்ணாச்சி இடைமறிக்க, ''தெரியாம எப்படிப்பா இருக்கும்... 'வேறு ஏதாவது இடமா இருந்தா கூட பரவாயில்லை... பல்கலையை சுற்றி தேவையா... கல்விக் கூடங்களில், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்காம, துணைவேந்தர், 'தடா' போடணும்'னு, கல்வியாளர்கள் விரும்புறாங்க பா...'' என விவரித்தார் அன்வர்பாய்.

''வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீசாரும் புலம்புதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''ஏங்க... பொங்கல் போனஸ் இன்னும் கிடைக்கலியாமா...'' என, இடைமறி்த்தார் அந்தோணிசாமி.

''அது இல்லை வே... ரேஷன் அரிசியை, யாரும் ஆந்திராவுக்கு கடத்துறது இல்லையாம்... அதான் புலம்புதாவ...'' என்ற அண்ணாச்சி, தொடர்ந்து, ''திருவள்ளூர் மாவட்டத்துல இருந்து தான், அதிகளவுல, ரேஷன் அரிசியை, ஆந்திராவுக்கு கடத்துதாவ...

''ரெண்டு மாசமா, கடத்தல் குறைஞ்சிடுச்சு... குறிப்பா, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் இருந்து, கடந்த ரெண்டு மாசமா, யாருமே, ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தலை...

''ஏன்னா, நகரி, புத்துார் பகுதிகள்ல, ரேஷன் அரிசியை வாங்குற முதலாளிகள், இப்போ, ஜெயில்ல இருக்காவ...

''ரேஷன் கடத்தலில் ஈடுபடும் பெண்களும், வியாபாரிகளும், ரெண்டு மாசமா, வீட்டில ஓய்வு எடுக்காவ...

''இதனால, 'வருவாய்' பாதிக்கப்பட்ட, வருவாய்த் துறை ஊழியர்களும், போலீசாரும் கவலைல இருக்காவ... கடத்தல்காரங்ககிட்ட, 'மீண்டும் எப்போ, தொழிலை ஆரம்பிக்கப் போறீங்க?'னு, கேக்காவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி. ''வேற ஒண்ணும் விஷயமில்லையே பா...'' என்ற அன்வர்பாய், ''நான் கிளம்பறேன்...'' என்றபடி, நடையைக் கட்டினார். மற்ற நண்பர்களும் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது.

More Hot News Click Here..

No comments: