சொல்கிறார்கள்
புத்தக பையின் சுமை குறையும்!மாணவர்கள், அதிக நோட்டு புத்தகங்களை சுமந்து செல்வதை தவிர்க்க, புதிய கருவியை கண்டுபிடித்த, கோகுல்நாத்: நான், சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், நான்காம் ஆண்டு, 'எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்' படிக்கிறேன். பள்ளி பயிலும் மாணவர்கள், அதிக அளவிலான நோட்டு புத்தகங்களை, சுமந்து செல்கின்றனர். சிறு வயதில், அதிக அளவிலான புத்தகங்களை சுமப்பதால், அச்சுமையே, சில சமயங்களில் படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். எனவே, மாணவர்கள், அதிக நோட்டு புத்தகங்களை சுமந்து செல்வதை தவிர்க்க, 'ஸ்மார்ட் டிஜிட்டல் டேபிள்' கருவியை கண்டுபிடித்தேன். டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், மாணவர்கள் புத்தகம் மற்றும் நோட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்பதே, இக்கருவியின் பிரதான நோக்கம். முதற்கட்டமாக, பல்வேறு ஆய்வுகளுக்கு பின், 'ஐ-பாட்' கருவியை, ஒரு டேபிளினுள் பொருத்தினேன். அதில் பதிவாகும் அனைத்து தகவலையும், அம்மாணவனின், 'இ-மெயில்' முகவரியில் பதியும் விதமாக, 'சாப்ட்வேர்' உதவியுடன் இக்கருவியை வெற்றிகரமாக உருவாக்கினேன். இதனால், வகுப்பறையில் ஆசிரியர் எடுக்கும் பாடங்களை அப்படியே, 'வாய்ஸ் ரெக்கார்டிங்' செய்யலாம். முக்கிய குறிப்புகளையும், தொடு திரை உதவியுடன் எழுதலாம். அதே போல், மின்நூல்களை, 'அப்டேட்' செய்து, ஆசிரியர் பாடம் எடுக்கும் நேரத்தில், பயன்படுத்தலாம். தற்போது, சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு பாடபுத்தகங்களை இதில் பதிவு செய்து உள்ளோம். ஸ்மார்ட் டிஜிட்டல் கருவியில், பதிவு செய்யப்படும் அனைத்து தகவல்களும், தானாகவே இ-மெயிலுக்கு செல்லும். இதனால், மாணவன் வீட்டிற்கு சென்றவுடன், அன்று பள்ளியில் நடத்தப்பட்ட பாடத்தை, இணைய வசதியுள்ள கணினியில் படித்து, எளிதாக புரிந்து கொள்வான். படிக்கவும் ஆர்வம் அதிகமாகும். இக்கருவியை பயன்படுத்தி, மாணவர்கள் தேர்வு எழுதினால், அதற்கான முடிவுகள் சில மணி நேரத்திலேயே தெரிந்து விடும். இக்கருவியை அதிகமாக உற்பத்தி செய்தால், 3,500 ரூபாய்க்குள் விற்பனை செய்யலாம்.
No comments:
Post a Comment